விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 29 மார்ச், 2022

சிந்தனை செய் தமிழா (03) ஆகமம், ஐதீகம் அத்துணையும் ஏமாற்று வேலை !

சூத்திர மக்களை பார்ப்பனர்கள் இன்னும் அடிமைப் படுத்தி வைத்துள்ளனர் !

 

நமது நாட்டில் மக்களைப் பிறப்பால் நான்கு வகையாகப் பாகுபடுத்தி வைக்கும் வழக்கம் வடக்கிலிருந்து வந்தவர்களால் ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்  எனவும் அவற்றுக்குப் பெயர் சூட்டப்பட்டது !

 

பிராமணர் என்போர், அரசகுருவாகவும், கோயில் பூசகராகவும், சடங்குகள் செய்விப்பராகவும், எளியவழியில் பொருளீட்டி உண்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.  இறைவன் ஒருவனே என்னும் மெய்ப்பொருள் வழி வாழ்க்கை நடத்தி வந்த மக்களிடம், பல கதைகளைப் புராணங்கள், இதிகாசங்கள் என்னும் பெயரில் புகுத்தினர். ஒரே கடவுள் என்னும் கோட்பாடு சிதைக்கப்பட்டு, பற்பல கடவுள்களை உருவாக்கி, அவர்கட்குக் கோவில்களையும் கட்டுவிக்கச் செய்தனர் !

 

கோவில்களும், அங்கு பூசை செய்யும் பிராமணரும் மன்பதையில் வலிமையுடன் நிலைபெற்று நீடிப்பதற்கு வசதியாக ஆகமங்கள் என்ற பெயரில் நூல்களை எழுதி வைத்தனர்.  ஆகமங்களில் இடம்பெறாத சில சடங்குகளை ஐதீகம் என்ற பெயரில் மக்களிடையே எழுதப்படாத சட்டமாக்கிக் கொண்டனர் !

 

பலநூறு ஆண்டுகள் சென்ற பின்பும் ஆகமங்கள், ஐதீகங்கள் என்று சொல்லியே சத்திரிய, வைஸ்ய, சூத்திர மக்களை பிராமணர்கள் இன்னும் அடிமைப்படுத்தி வைத்துள்ளனர் !

 

இறைவன் ஒருவனே என்னும் போது, அவனுக்கு எதற்கு பல்வேறு வடிவங்கள், பல்வேறு பெயர்கள், பல்வேறு பிறப்புக் கதைகள், பல்வேறு வழிபாட்டு முறைகள் ? எல்லா மக்களும் இறைவனின் குழந்தைகள் என்கையில் அவர்களுக்கு எதற்கு நால்வகை வகைப்பாடுகள் ? இதைப்பற்றி எந்த மனிதனையும் சிந்திக்க விடாதபடி அச்சம் தரும் கதைகளைப் புனைந்து  கதைகளாக்கி வைத்திருப்பதும் பய உணர்விலேயே மக்களை ஆழ்த்தி வைத்திருப்பதும் என்ன வகை ஆன்மிகமோ தெரியவில்லை !

 

ஒரு கோவிலில் பெண்கள் நுழைய உரிமை இல்லை. இன்னொரு கோயிலில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல உரிமை இல்லை. இறைவனா இந்தப் பாகுபாட்டை ஏற்படுத்தியது ? யாராவது இதைபற்றி ஐயம் எழுப்பினால் ஆகமம், ஐதீகம் என்று சொல்லி வாயடைத்து விடுகின்றனர் !

 

ஒரு கோயிலில் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் சென்று இறைவனை வழிபட ஐதீகம் என்ற பெயரில் தடை. இச்சிக்கல் நீதிமன்ற வழக்காகி உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஐந்து நீதிபதிகள் குழு வழக்கை ஆய்வு செய்து இறைவன் முன்பு ஆண், பெண் என்ற பாகுபாடு கூடாது; அனைத்துப் பெண்களும் ஆலயத்திற்குள் சென்று ஆண்டவனை வழிபடலாம்என்று தீர்ப்புக் கூறியது !

 

உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்கிறது இப்போது இந்தியாவை ஆள்கின்ற கட்சி. நாங்களும் ஏற்க மாட்டோம் என்கிறது ஆண்ட கட்சி !

 

நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படமாட்டோம்; பெண்களை ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்என்று இப்போது இந்திய அரசாட்சியை ஏற்றிருக்கும் கட்சி, வெளிப்படையாக அறிவித்து, போராட்டமும் நடத்துகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் களங்கம் விளைவிக்கும் கட்சியை யார் தண்டிப்பது ? எளிய நிலை மக்கள் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும்; ஆனால் ஆட்சியில் இருப்போர் கட்டுப்படமாட்டார்கள் ! என்ன ஞாயமிது ?

 

உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் யார் ? இந்த நாட்டில் ஆகமம், ஐதீகம் என்ற பெயர்களில் எழுதப்படாத சட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு சத்திரியர், வைசியர், சூத்திரர் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த - வைத்துக்கொண்டிருக்கும் -  அதே வகுப்பினர்தான் இன்றும் தங்கள் ஆட்டத்தைக் காண்பிக்கிறார்கள் . இந்த மாய வலையிலிருந்து சத்திரிய, வைசிய, சூத்திர மக்கள் விடுபடுவது எப்போது ?

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

------------------------------------------------------------------------------

வெள்ளி, 25 மார்ச், 2022

சிந்தனை செய் தமிழா (02) மயங்கிக் கிடக்கும் மறத் தமிழர் குலம் !

 

மயங்கிக் கிடக்கும் மறத்தமிழனே ! தமிழன்என்னும் அடையாளத்தை இழந்த பின்புதான் உன் மயக்கம் தெளியுமா ?

 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. தமிழனுக்கும் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறது. உலகத்திலேயே மிகத் தொன்மையான மொழிக்குச் சொந்தக்காரன்; இலக்கிய, இலக்கண வளங்கள் மிக்க மொழிக்குச் உரிமையாளன்; வீரத்திற்கும் கொடைக்கும், நாகரிகத்திற்கும்  எடுத்துக் காட்டாக விளங்குகின்ற இனத்தினன், என்று பல சிறப்புகள் இருந்தன !

 

இன்றைய தமிழன் இத்தகைய சிறப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு உலக அரங்கில் முன்னிலை பெறும் ஆற்றல்களைப் பெற்றிருக்கிறானா என்பதை எண்ணிப் பார்த்தால், நெஞ்சம் சோர்வடைகிறது; நினைத்துப் பார்க்கையில் உள்ளம் கனற்புற்று  நீறாகிறது !

 

மதிமயக்கம் தரும் புலனங்கள் நாட்டில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் தமிழ் நாட்டில் அவற்றின் எண்ணிக்கை அளவிடமுடியாதவை. சரி ! மதி மயக்கம் அப்படி என்ன தான் தீங்கு செய்கிறது ?. வேறொன்றுமில்லை, மனிதனது சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக முடக்கிப் போட்டு, அவனை மூளையற்ற மூடனாக்கி விடுகிறது !

 

குறிப்பாகச் சொல்லப் போனால், தமிழன் இன்றைக்கு, ஆறு வகையான மதி மயக்கங்களுக்கு  (போதைக்கு) அடிமையாகிக் கிடக்கிறான். பகுத்தறிவைத் துறந்து பண்புகளை இழந்து விலங்கினும் கீழாக வீழ்ந்து கிடக்கிறான். அவை பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம் !

 

(01)    மது மயக்கம் : மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில், மதுக் கடைகளைத் திறந்து வரலாற்றுப் பிழையை செய்தது ஒரு ஆட்சி. இதே ஆட்சி, பின்பு இதன் தீய விளைவுகளை உணர்ந்து, மதுவிலக்கை மீண்டும் நடைமுறைப் படுத்தியது. பின்னர், அடுத்து வந்த ஆட்சி, மீண்டும் மதுவிலக்கை நீக்கியது. 


பட்டிதொட்டி எங்கும் மதுக்கடைகளைத் திறந்து, அதன் வருவாயிலிருந்து ஆட்சி நடத்தும் போக்கு, இன்றும் தொடர்கிறது. இரண்டு தலைமுறைத் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். மது அடிமைகள் தம் அறிவைத்  தொலைத்ததுடன், வாழ்க்கையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் !

 

(02) பதவி மயக்கம் : பதவிக்கு ஆசைப்படும் தமிழனின் எண்ணிக்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் அரிதாக இருந்தது. அரசியல் கட்சிகளின் ஆட்சி பீடப் போட்டியின் விளைவாக, கட்சி வளர்ப்புக்கு, ஒரு அரசியல் கட்சி, தன் தொண்டர்களுக்கு பல்லாயிரக் கணக்கில்  கட்சிப் பதவிகளையும், மாநில, மாவட்ட, வட்ட அளவில் நூற்றுக் கணக்கில் ஆட்சிப் பதவிகளையும்  உருவாக்கி, அவற்றில் தொண்டர்களை நியமித்து, முதன் முதலாகப் பதவி ஆசையைக் கட்சித் தொண்டர்களான தமிழர்களிடையே பற்ற வைத்தது. 


இந்த அரசியல் கட்சி பற்ற வைத்த தீ, எங்கும் பரவி, அனைத்துக் கட்சிகளையும் தனது நெருப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, இன்று எல்லாக் கட்சிகளிலும் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டு முன் வரிசையில் இடம் பிடிப்போர் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் நெடு நெடுவென்று வளர்ந்து நிற்கிறது. பதவி கிடைத்த பின்பு,  அதனால் கிடைக்கும் பலன்களைத் துய்க்கும் (அனுபவிக்கும்) ஆசையில், தன்மானம்  இழந்து கட்சித் தலைமையிடம் கொத்தடிமைகளாகக் கூனிக் குறுகி முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறார்கள். பதவியினால் கிடைக்கும் மயக்கம், அவர்களிடமிருந்து மனிதப் பண்புகளையும் பறித்துக் கொண்டு போய்விடுகிறது !

 

(03)திரையுலக மயக்கம் : திரைப்பட நடிகர்கள் தங்கள் வளர்ச்சிக்காக சுவைஞர்மன்றங்களை உருவாக்கி, அதில் பொறுப்பாளர்களை அமர்த்தி, தேங்காய்ச் சில்லுகளைப் போலச் சில நயப்புகளைத் (சலுகைகளை) தந்து, தங்கள் படம் வெளியாகும் போது திரையரங்க வாயிலில் கொடிகட்டவும், தோரணம் மாட்டவும் பயன்படுத்தலாயினர். இதில் சுவை கண்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சுவைஞர் மன்றஉறுப்பினர்கள் ஆயினர். தனியார் தொலைக்காட்சிகள் வணிகப் போட்டியால் ஒவ்வொரு நாளும் பல  திரைப்படங்களை இலவயமாக ஒளிபரப்பத் தொடங்கின.  அச்சு ஊடகங்கள் திரையுலகச் செய்திகளை நிரம்பவும் வெளியிட்டன. 


இதன் விளைவாக இன்று தமிழக மக்களில் தமிழர்களில் 70 % எண்ணிக்கையினர் திரையுலக மயக்கத்தில் மூழ்கித் திளைக்கின்றனர். திரைப்பட நடிகர்களுக்கு அட்டையுரு (CUT-OUT) வைத்து பால்முழுக்காட்டிச் சூடம் காட்டிச் சுற்றிப் போடும் அருவருப்பான போக்குக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இம்மயக்கம் அவர்களின் சிந்தனைத் திறனைச் செயலற்றதாக்கி விட்டது. பகுத்தறிவை இழந்த இந்தப் பாமரர்கள் திரைப் பட நடிகர்களுக்குப் பல்லக்குத் தூக்கும் ஊதியமில்லா ஊழியர்களாக இன்று உலா வருகின்றனர் !

 

(04) ஆங்கில வழிக் கல்வி மயக்கம் : ஆங்கில வழிக் கல்வி மீதான  ஆசை, மது குடித்த குரங்கு போல இன்று மக்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. கல்வி வணிகர்களின் கவர்ச்சி மிக்க விளம்பரங்களில் மனதைப் பறி கொடுக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை பதின்மப் பள்ளிகளில் (MATRICULATION SCHOOLS) சேர்த்து தமது  சொத்துகளை  எல்லாம் இழந்து கொண்டிருக்கின்றனர். அம்மா”, “அப்பாஎன்னும் விளிச்சொற்களில்  மனம் களிக்காத தமிழன் டேடி”, “மம்மிஎன்னும் விளிப்புகளைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்து மயங்கிப் போகிறான். 


ஆங்கில வழிக் கல்வி தனது குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கப் போகிறது என்று பகலிலேயே கனவு காணும் தமிழன், தன் தாய்மொழி தமிழ் என்பதைத் துப்புரவாக மறந்து ஆங்கில வழிக் கல்விக்கு அடிமையாகிப் போய்விட்டான். ஆங்கில வழிக் கல்வி மீதான இந்த மயக்கம் அவனது பகுத்தறிவுத் திறனைப் பழுதுபடுத்தி  விட்டது !

 

(05)இறைமயக்கம் : இறை மயக்கம் என்பது அச்சத்தின் அடிப்படையில் ஏற்படுவது. ஒவ்வொரு மனிதனும் தனது நலன் மற்றும் தன் குடும்பத்தார் நலன் பற்றிய அக்கறையுடனேயே வாழ்கிறான். இது இயல்பான ஒன்றே ! இந்த அச்ச உணர்வைப் பயன்படுத்தி, தன்னலச் சார்புடைய ஒரு வகுப்பினர், ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்னும் திருமூலர் கோட்பாட்டுக்கு மாறாகப் பல கடவுள்களை உருவாக்கி, அதை நிறுவுவதற்கு வாய்ப்பாகப் பல புராணக் கதைகளை உருவாக்கி மக்களிடையே பல நூற்றாண்டுகளாகப் பரப்பி வந்திருக்கின்றனர்; இன்னும் பரப்பியும் வருகின்றனர். 


இறைவனை நம்பினால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும், நம்பாதோர் நிரயத்தில் (நரகத்தில்) தண்டிக்கப் படுவர் என்றும் கதை சொல்லி மக்களை நம்ப வைத்துவிட்டனர். இறை நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, இன்று மூட நம்பிக்கையாக உரு மாறிவிட்டது. நேர்த்திக் கடன் என்ற பெயரில் மனிதன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுதல், வரம்பு கடந்து போய்க்கொண்டிருக்கிறது. அச்சத்தின் வயப்பட்ட இந்த ஆன்மிகம் தமிழர்களைச் சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. கோயில் கருவறைக்குள் செல்ல முடியவில்லை; தமிழில் வழிபட முடியவில்லை;  நமக்குப் புரியும் மொழியில் நமது கோரிக்கைகளை அந்தப் பூசாரி இறைவனிடம் சொல்வதும் இல்லை. 


ஒரு சில பூசாரிகள்  கருவறைக்கு உள்ளே ! ஓராயிரம் பக்தர்கள்  வாயிற்படிக்கு வெளியே ! இறைவன் திருமுன்பே தீண்டாமை ! இந்த உண்மைகள் புரிந்தாலும், அச்சத்தின் குரங்குப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும்  தமிழன் இறையுணர்விலிருந்து விடுபட முடிவதில்லை. இத்தகைய இறை மயக்கதிலிருந்து தமிழன் விடுபடுகின்ற காலமும் இன்னும் வரவில்லை !

 

(06)அரசியல் மயக்கம் : தமிழ்நாட்டில், மக்கள் 24 மணி நேரமும் அரசியல்  மயக்கத்திற்கு ஆட்பட்டுப்  பகல் கனவுகளுக்குப் பலியாகி வருகின்றனர். அத்துணை அரசியல் கட்சிகளும் ஆளுக்குக் கொஞ்சமாகக் கூறு போட்டுத் தேர்தல் களத்தில் தமிழர்களை விற்பனைப் பொருளாக்கி விலை பேசி வருகின்றனர். ஒவ்வொரு தமிழனும் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்குச் சார்பு உடையவாக மாறிப் போய்விட்டான். அந்த கட்சியின்பால் அவன் கொண்டிருக்கும் மயக்கத்திலிருந்து அவனால் விடுபட முடிவதில்லை. தமிழர்களிடையே ஒற்றுமை உடைந்து போனமைக்கு இந்த அரசியல் சார்பு மயக்கமே முதன்மைக் காரணம்.

 

மடல் விளையாட்டு (CRICKET) மயக்கம், தொலைக் காட்சித் தொடர் மயக்கம், போன்ற வேறு சில மயக்கங்கள் தமிழனை அடிமைப் படுத்தி வந்தாலும்,  அவற்றின் தாக்கம் ஓரளவு மட்டுப் பட்டதே என்பதால், அவை பட்டியலிடப் படவில்லை !

 

பட்டியலிடப்பட்ட அறுவகை மயக்கங்களிலிருந்தும்  தமிழன் விடுபட்டு விட்டால், வீழ்ந்து கிடக்கும் தமிழன் தனது  அறிவுக் கண்களைத் திறந்து எழுந்து விட்டால், மதுக் கடைகள் இழுத்து மூடப்பட்டு விடும்; பதவி நாற்காலிகள் மதிப்பிழந்து பரண்களுக்கு இடம் பெயரும்.; திரைப் படங்கள் தடை செய்யப்படும்; தமிழ் வழிக் கல்வி தமிழகத்தில் மீட்சி பெறும்; பதின்மப் பள்ளிகள்  தமிழ்ப் பள்ளிகளாக மாற்றப்படும்; ; கோயில்களில் வடமொழிப் பூசாரிகள் காணாமற் போவர்; தமிழில் மட்டுமே வழிபாடு நடக்கும்; அரசியல் கட்சிகள் பல கலைக்கப்படும் !

 

இத்தகைய நற்பேறுகள் வாய்க்கும் நாள் எந்நாளோ என்று ஏங்கித் தவிக்கிறது தமிழுணர்வாளர்களின் உள்ளம் !  ஆனால் அதற்கான விடிவெள்ளி இன்னும் முளைக்கவில்லையே ! இந்த அறுவகை மயக்கங்களிலிருந்தும் தமிழன் விழிப்பதாகவும் தெரியவில்லையே !

 

ஏ ! தமிழா ! தன்னிலை மறந்து. தாழ்நிலை உற்று உழலும் தமிழா ! இனி நீ உன்னைத் தமிழனென்று சொல்லாதே ! வீணே  தலை நிமிர்ந்தும் நில்லாதே !

 

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ச்சுரங்கம்” வலைப்பூ,

[தி.ஆ: 2053,  மீனம் (பங்குனி) 11]

{25-03-2022}

-------------------------------------------------------------------------------



வியாழன், 24 மார்ச், 2022

சிந்தனை செய் தமிழா (01) ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் அரசியல் !

அரசியல் கட்சிகளின் பின்னால் அணிவகுத்து நின்று, தமிழர்களிடையே ஒற்றுமைக் குலைவுக்கு உதவி செய்யாதீர் !

 

புதுடில்லியில்  [ஒன்றியத்தில்]  அமைகின்ற  அரசுகளால் தமிழ்நாடும்,  தமிழக    மக்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பெற்று வருவதை   நீங்கள் அறிவீர்கள் !

 

அதுபோல் தமிழ் மொழியும்  பல நெருக்குதல்களுக்கு உள்ளாகி வருவதும் அனைவரும் அறிந்த செய்தியே ! இவற்றிற்கு  எல்லாம் காரணம் என்ன என்பது பற்றிச் சற்று ஆய்வு செய்வோம் !

 

தமிழக அரசு 2014-ல் வெளியிட்ட ஒரு செய்தியின்படி  தமிழ்நாட்டில் மட்டும் 194 பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சாதியைப் பின்புலமாக வைத்து இயங்கும் அரசியல் இயக்கங்களும் இவற்றுள் அடக்கம் !

 

இந்த 194 அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருவற்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவற்றைப் பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டாம் !

 

ஆனால் அவை இங்கு இயங்கி வருவதால் தமிழ் நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விளைந்த நற்பயன்கள் அல்லது தீயபயன்கள்  யாவை என்பதைப் பற்றி மட்டும் பார்ப்போம் !

 

2015-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி  தமிழக மக்கள் தொகை 7.67 கோடி ஆகும். இந்த 7.67 கோடியில் சற்றேறக் குறைய 5 கோடி பேரை இந்த அரசியல் இயக்கங்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுத் தம் பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றன !


இவர்களை மூளைச் சலவை  செய்து  தங்களை விட்டுப் பிரியாத வண்ணம் பிணித்து வைத்திருக்கின்றன. ஒருவருடன் ஒருவர் சேராதபடி விலகி நிற்கவும் வைத்திருக்கின்றன !

 

இன்னும் சில இயக்கங்கள் இவர்களிடையே பகைமை எண்ணத்தை விதைத்து ஒருவர் முகத்தில் மற்றவர் விழிக்கலாகாது என்ற உணர்வையும், தப்பித் தவறி விழித்தால் பதவி பறிக்கப்படும் என்ற  நிலையையும்  உருவாக்கி  வைத்திருக்கின்றன !

 

ஐந்து கோடித் தமிழக  மக்களை ஒருவரோடு ஒருவர் ஒன்றவிடாமல் இந்த அரசியல் கட்சிகளின்  தலைவர்கள்  பிரித்து வைத்திருக்கிறார்கள். யாருக்காக இந்த மக்கள் இப்படி அணி பிரிந்து நிற்கிறார்கள் ?

 

தங்களுக்காகவா ? அல்லது  ஏழை  எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவா ? இல்லை ! தலைவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக - அவர்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக -  மக்கள் பிரித்து வைக்கப் பட்டிருக்கிறார்கள். பிரித்தாளும் கலையை இந்தத் தன்னலத் தலைவர்கள் மிகத் திறமையாக  அரங்கேற்றி வருகிறார்கள் !

 

தமிழகத்தில் உள்ள 7.67 கோடி மக்களில்   அரசியல் கட்சிவாரியாகக் கட்டுண்டு கிடக்கும் 5 கோடி பேர் போக மீதமுள்ள 2.67 கோடியில் ஏறத்தாழ 2 கோடி பேர் சமுக அக்கறை அற்றவர்கள். இவர்கள், இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று தத்துவம் பேசுபவர்கள். வாக்களிக்கும் தருணத்தில், அவ்வுரிமையை விற்பனை செய்பவர்கள் !

 

எஞ்சிய 0.67 கோடி பேர்தான், சமுக அக்கறையோடு செயல்படுபவர்கள். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வதன்றி வேறெதுவும் செய்ய இயலாதபடி கையறு நிலையில் கலங்கிக் கொண்டிருப்பவர்கள் !

 

அரசியல் கட்சிவாரியாக அணி பிரிந்து நிற்கும் தமிழ் நாட்டு மக்கள், எந்தவொரு பிரச்சினையானாலும் ஒன்றுபடுவதும் இல்லை. ஒருமித்துக் குரல் கொடுப்பதும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்கள்  நமக்கு அள்ளித் தந்திருக்கும் பரிசு இந்தத் தீய பயனே அன்றி வேறெதுவுமில்லை !  

 

காவிரிப் பிரச்சினை, கண்ணகிக் கோயில் பிரச்சினை  முல்லைப் பெரியாறு பிரச்சினை, தனி ஈழம், ஏறு தழுவல், வழக்காடு மொழி, வழிபடும் மொழி, மீனவர் வாழ்வாதாரம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆற்று மணல் கொள்ளை, கூடங்குளம் அணு உலை, இந்தித் திணிப்பு, மது ஒழிப்பு, கல்வி வணிக மயமாதல் ஆகிய எந்தப் பிரச்சினையானாலும் மக்கள் ஒன்று திரளாதபடி அணி பிரித்து வைக்கப்பட்டிருப்பது யாரால் ? அரசியல் கட்சிகள்  அல்லவா   இந்த   அவல   நிலைக்குக் காரணம் !

 

நண்பர்களே ! உங்களது அரசியல் சார்பு நிலையைச் சற்று எண்ணிப் பாருங்கள். மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளில் கூட நம்மை ஒன்று கூட விடாமல் பிரித்து வைத்திருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாம் இன்னும் துணை போக வேண்டுமா ?

 

எந்தப் பிரச்சினையானாலும் நாம் ஒன்று திரண்டுப் போராட மாட்டோம் என்பதை மையத்தில் ஆட்சிக்கு வரும் அரசுகள் எளிதில் தெரிந்து கொள்கின்றன. இதனால் தான் அவர்கள் நம்மை மதிப்பதில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப் படுவதில்லை !

 

தமிழ்நாடு தாழ்நிலைக்குப் போனதற்கும், தமிழ் மொழி நசுக்கப் படுவதற்கும் நாம் தான் காரணம். நம்மிடையே நிலவும் ஒற்றுமை இன்மைதான் காரணம். நம்மிடையே ஒற்றுமை இன்மை நிலவுவதற்கு  தமிழ்நாட்டிலுள்ள 194 அரசியல் இயக்கங்கள் தான் காரணம் !

 

எனவே உண்மை   நிலையை   இப்போதாவது   உணர்வோம் ! அரசியல் கட்சிகளின் சார்பு நிலையை நாம் வாக்களிப்பதற்கு மட்டும் வைத்துக் கொள்வோம் ! ஏனைய நிலைகளில் அரசியல் சார்பு நிலையைக் கை விடுவோம் ! நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒற்றைத் தளத்தின் மீதாவது இனி  ஒன்று கூடுவோம் !

 

தமிழ்நாட்டில் வசிப்பவர் அனைவருமே தமிழர்கள் என்ற நிலைப்பாடு தான் இப்போதைய தேவை. நமக்குள் வேற்றுமை பாராட்டுவதைக் கைவிடுவோம். மதமோ, சாதிகளோ நம்மைப் பிரித்து வைக்க அனுமதிக்க வேண்டாம் !

 

மூதாதையர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற  ஆராய்ச்சி எல்லாம் இப்போது வேண்டாம். வீராவேசப் பேச்சுகளால் பயனில்லை. சிறு குழுக்களின் பின்னால் நம்மை இணைத்துக் கொண்டு அவர்களுக்குப் பரப்புரை செய்வதால் பயன் விளையப் போவதில்லை !

 

இப்போது விழிக்காவிட்டால், நமக்கு எப்போதும் விடிவே இல்லை என்பதை உணர்வோம் ! அரசியல்  கட்சி அடையாளங்களைத் துறந்து விட்டு, தமிழர்கள் என்ற தளத்தில் ஒன்று கூட  முன்வாருங்கள் ! இதற்குத் தமிழ்ப் பணி மன்றம் ஒரு கருவியாக அமையட்டும்!

 

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளைப் புறந்தள்ளி விட்டு, அரசியல் கட்சிகளின் பின்னால் அணிவகுத்து நின்று, தமிழர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கத் துணிந்தால், ஏ ! தமிழா ! இனி உன்னைத் தமிழனென்று  சொல்லாதே ! வீணே தலை நிமிர்ந்தும் நில்லாதே !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச்சுரங்கம்” வலைப்பூ,

[தி.ஆ.2053, மீனம் (பங்குனி) 10]

{24-03-2022}

------------------------------------------------------------------------------------