நன்றி சொல்லத் தெரிந்தவன் நல்ல நண்பர்களைப் பெறுவான் !
மனிதன் என்ற உயிரினத்திற்கு இலக்கணம் சொல் என்று பத்தாம் வகுப்பு
ஆசிரியர் கேட்டார்; பிற உயிரினங்களிடம் இல்லாத ‘இரண்டு கரங்களை’ப் பெற்றிருக்கும் உயிரினம் குரங்கைத்
தவிர, ”மனிதன்” மட்டுமே என்றான் தூயமணி!
சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம், இப்பூவுலகில், “மனிதன்”தான் என்றாள் மகிழ்மதி. பிற உயிரினங்களுக்குச் சிந்திக்கத் தெரியாது;
மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கத் தெரியும்
என்றான் நாவலர்நம்பி. பேசத்தெரிந்த உயிரினம் “மனிதன்” மட்டுமே என்றாள் கனித்தமிழ் !
அனைத்தும் சரியான விடைகள் தான்; எனினும் இன்னும் ஒரு சிறப்பு மனிதனிடம் இருக்கிறது; மனிதனுக்கு மட்டுமே தன் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லாலும் செயலாலும்
வெளிப் படுத்தத் தெரியும். பிற உயிரினங்களிடம் இல்லாத இச்சிறப்பு மனித இனத்திற்கே
உரியது என்று விளக்கம் தந்தார் ஆசிரியர் நலங்கிள்ளி !
இத்தகைய சிறப்பு வாய்ந்த உயர்ந்த பிறவியைப் பெற்றிருக்கும் மனிதர்கள்,
தங்கள் சிறப்பை முறையாக வெளிப்படுத்துகிறார்களா
என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !
பிறர் நமக்கு உதவி செய்யும் போது, அவர்களுக்கு உள்ளன்புடன் நன்றி சொல்வது நயத்தக்க நாகரிகம்; நற்பண்பு ! உதவிகளைப்
பெற்றுப் பயனடையும் மாந்தர்களில் எத்துணை பேர் நன்றி சொல்கிறார்கள்? செல்வச் செழிப்பில் திளைப்பவர்கள், எளியவர்கள் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வதில்லை. மெத்தப் படித்த
அறிவாளிகள் அறிவுச் செருக்கால், பிறர் செய்யும் உதவிக்கு நன்றி சொல்ல
முன்வருவது இல்லை !
அதிகாரத்தில் உயர்ந்தவர்கள், சார்நிலை அலுவலர்களிடம்
உதவி பெறுவார்கள்; ஆனால் நன்றி சொல்ல மனம் ஒப்புவதில்லை.
அரசியல் சாயத்தில் தோய்ந்த அழுக்குமன மாமணிகள் “நன்றி” என்னும் சொல் இருப்பதையே மறந்து
போனவர்கள் ! சமுதாயத்தில் கீழ்நிலையில்
உள்ள எளிய மனிதர்களுக்கு நன்றி சொல்லத் தெரிவது இல்லை ! நன்றி சொல்வது நல்லதொரு
பண்பாடு என்னும் எண்ணம் இல்லாத எவரும் நன்றி சொல்வது இல்லை !
நன்றி சொல்லத் தெரிந்தவன் நல்ல நண்பர்களைப் பெறுவான்; உள்ளன்போடு நன்றி சொல்பவன் உயர்ந்த மனிதர்களின் உதவியைப் பெறுவான்.
அடிக்கடி நன்றி சொல்பவன் அவனது சொந்த வாழ்க்கையில் என்றும் ஏறுமுகத்தையே எய்துவான் !
”நன்றி” என்று நாக்கூசாது சொல்லத்
தெரிந்தவனிடம், தாழ்வு மனப்பான்மை இருந்தால் அது
தகர்ந்து போகும் ! உயர்வு மனப்பான்மை இருந்தால் அது உடைந்து நொறுங்கும் ! ஆணவம்
அவனிடம் அண்டி வளராது ! கோபம் அவனிடம் குடிகொள்ள இயலாது ! ”மனிதம்” அவனிடம் மலர்ந்து மணம் பரப்பும் !
நண்பர்களே ! உங்கள் குழந்தைகளுக்கு நன்றி சொல்லக் கற்றுக் கொடுங்கள்
! அவர்கள் வாழ்க்கையில் உயர்நிலையை அடைவார்கள் ! நல்ல கல்வி, நல்ல நட்பு, நல்ல எண்ணங்கள், நல்ல பழக்கங்கள் அவர்களை வந்து அடையும் ! நிறைவாக ஒன்று – முடிந்தால் நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள் – இதுவரை இப்பழக்கம் உங்களிடம் இல்லாதிருந்தால் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
27]
{10-06-2022}
-----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக