கொண்டாட்டத்திற்கு ஒரு அடிப்படை வேண்டாவா ?
------------------------------------------------------------------------------------
ஆங்கிலேயர்கள் கொண்டாட வேண்டிய நாளை நாம்
ஏன் கொண்டாடுகிறோம் ? இந்தக்
கேள்விக்கு எந்தத் தமிழனும் விடை சொல்ல முடியாது ! ஏனென்றால் விடை தெரியாது !
தமிழனுக்குத் தெரிந்த பதில் (மறுமொழி)
ஒன்றுதான் ! அஃது என்ன தெரியுமா ? எல்லோரும்
கொண்டாடுகிறார்கள், நானும் கொண்டாடுகிறேன் ! அவ்வளவு தான் !
நள்ளிரவு 12-00 மணிக்கு தெருவுக்கு வந்து “ஹேப்பி நியூ இயர்” என்று
கூக்குரலிட்டுக் கூத்தாடும் தமிழன் தமிழ்ப் புத்தாண்டு நாள் தைத்திங்கள் முதல்
நாளா, சித்திரைத் திங்கள் முதல் நாளா என்று
தெரிந்து கொள்ளாமலேயே, அன்று நள்ளிரவு நன்றாகத் தூங்கிப் போகிறான்
!
கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் மெல்லப் பரவிய வடமொழி மேலாண்மை, கி.பி 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் உச்சத்தை எட்டியது. அதிலிருந்து வடமொழிக்கு
அடிமையாகிப் போனோம். கி.பி 17-ஆம்
நூற்றண்டுக்குப் பிறகு ஆங்கில மொழியின் மேலாண்மையால் ஆங்கிலத்துக்கு அடிமையாகிக்
கிடக்கிறோம் !
இன்றைய தமிழன், தமிழனாக
இல்லை. ஆன்மிகத் துறையில்,
ஆலய வழிபாட்டுத்
துறையில், பெருநாள் கொண்டாட்டத் துறையில்
(பண்டிகைகள்) பெயரியல் துறையில், கோளியல் துறையில் (சோதிடம்) தமிழன்
முற்றிலுமாக வடமொழியின் ஆளுமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனைத்
திறனை இழந்து கிடக்கிறான் !
இவை போதாவென்று, (அரசு) ஆட்சித் துறையில், கல்வித்
துறையில், வேலை வாய்ப்புத் துறையில், வணிகத் துறையில், ஊடகத்
துறையில், திரைப்படத் துறையில், மற்றும் இன்னபிற துறைகளிலும் ஆங்கிலத்தின்
அடிவருடியாய் முதுகெலும்பு இழந்த மூடனாகத் தமிழன் வீழ்ந்து கிடக்கிறான் !
இந்த அழகில், ஆங்கிலப்
புத்தாண்டுக்கு என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கிறது ? விரைவில்
தமிழ்ப் புத்தாண்டு வரவிருக்கிறது. அப்போது உங்கள் கொண்டாட்டங்களை வைத்துக்
கொள்ளுங்கள் !
நண்பர்களே ! வாழ்த்துவதற்கு, நாளும் கோளும் தேவையில்லை ! எப்போது
வேண்டுமானாலும் வாழ்த்தலாம் ! எனவே, ஆங்கிலப்
புத்தாண்டு நாளில், கொண்டாட்டங்களை விட்டொழித்து, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள் !
அதில் தவறில்லை ! மறந்து விடாதீர்கள், “ஹேப்பி நியூ
இயர்” உங்கள் நாவில் இடம்பெற வேண்டாம் ! “புத்தாண்டு நல்வாழ்த்துகள்” பூப் பூவாய்ப் பூக்கட்டும் !
நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துகள் ! இப்புத்தாண்டில் தமிழ் தழைக்கட்டும் ! உங்கள் வாழ்வில் வளம்
பெருகட்டும் !!
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 03]
{17-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக