நடுவண் அரசால் அமர்த்தப் பெற்ற
கத்தூரிரங்கன் குழு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் பரிந்துரை
செய்துள்ளது. இப் பரிந்துரையின்படி, பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் இந்தி கட்டாயப் பாடம்
ஆகிறது !
கத்தூரிரங்கன் கல்வியாளர் அன்று; அவர் ஒரு அறிவியலாளர். கல்வியாளர் அல்லாத
ஒருவர் பள்ளிகளில் சொல்லித் தரப்பட வேண்டிய பாடத் திட்டங்கள் பற்றிப் பரிந்துரை
செய்வது பொருத்தமில்லாதது. இந்தியாவில் தான் இத்தகைய முரண்பாடான செயல்கள்
நிகழ்கின்றன !
ஊடகங்களில்
இச் செய்தி வெளியானவுடன்
ஒரு நண்பர் என்னிடம் வினவினார், ”பிற
மாநிலங்களுக்குச் செல்லும் நம்மவர்கள் இந்தி தெரியாமையால் இன்னற்படுகிறார்களே, நாம் இந்தியைக் கற்றுக் கொண்டால் தான் என்ன ?”
தமிழ் நாட்டினர் இந்தி படிக்க வேண்டும்
என்று சொல்பவர்கள் மூன்று காரணங்களுக்காக
அப்படிச் சொல்கின்றனர். (1)
இந்தி நமது நாட்டின்
ஆட்சி மொழி. ஆகையால் நாமும் அதை அறிந்திருக்க வேண்டும் (2) இந்தி தெரியாததால் பிற மாநிலங்களில் தமிழர்கள் வேலை வாய்ப்பைப்
பெறமுடிவதில்லை. (3) பிற மாநிலங்களுக்குச் செல்கையில் இந்தி
தெரியாமையால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இன்னற்பட வேண்டியிருக்கிறது !
இதைப் பற்றி சற்று அலசிப் பார்ப்போம்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு எப்போதுமே ஒரே நாடாக இருந்ததில்லை. விடுதலை
பெற்றுப் பல்லாண்டுகளுக்குப் பின்பு தான் -
மன்னராட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளும், போர்ச்சுகீசியர்கள், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள்
ஆட்சியில் இருந்த பகுதிகளும் இணைக்கப்பட்ட பின்பு தான் ஒரே நாடு என்ற நிலையை
அடைந்தது !
பல்வேறு
இனத்தவர்கள், பல்வேறு மொழிகள்
பேசுபவர்கள், பல்வேறு பண்பாடு உடையவர்கள், பல்வேறு பழக்க வழக்கங்களை உடையவர்கள்
உள்ளடங்கிய நாடு தான் இந்தியா. இந்திய அரசின் 2001 –ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 122 பெரிய மொழிகளும் 1599 சிறிய மொழிகளும் இருப்பதாகக் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு 1700-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள்
அனைவரையும் ஒன்றிணைக்கும் நூற்சரமாக ஆங்கிலம் இருந்து வருகிறது !
இந்திய விடுதலைக்கு முன்பாக இந்திய அரசியல்
வரையறை அவை (நிர்ணய சபை) ஒன்று ஆங்கிலேய
அரசால் அமைக்கப் பெற்று அதன் தலைவராக
முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். இராசேந்திர பிரசாத் டிசம்பர் 1946 –ல் பொறுப்பேற்றிருந்தார் !
இந்திய விடுதலைக்குப் பின் டாக்டர்.
இராசேந்திர பிரசாத் தலைமையில் கூடிய இந்திய அரசியல் வரையறை அவையில், இந்தியாவின் ஆட்சி மொழி பற்றிய வாதம்
வந்தபோது, இந்தியாவின் ஆட்சி மொழி ஆங்கிலமா, இந்தியா என்பது பற்றி சர்ச்சை
எழுந்தது. இந்தி பேசாத மாநில
உறுப்பினர்கள் இந்திக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆங்கிலம், இந்தி
இரண்டுக்கும் ஆதரவாக சரி சமமாக வாக்குகள்
பதிவாயின. எப்போதுமே நடுநிலை வகித்து அவையை
நடத்த வேண்டிய அவைத் தலைவர் இந்திக்கு ஆதரவாக தனது வாக்கினை அளித்து, தீர்மானம் நிறைவேறச் செய்தார். அரசியல்
வரையறை அவையின் (நிர்ணய சபையின்) முடிவை எற்று இந்திய அரசு,
14-9-1949 முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை அறிவித்து ஆணை
வெளியிட்டது !
ஏறத்தாழ 1700 –க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் இந்தியாவில், அனைத்து
மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய இந்திய அரசு, இந்திக்கு
ஆதரவாகச் செயல்பட்டது; இப்பொழுதும் செயல்படுகிறது. இஃது அல்லாமல், இந்தியைப் பல வழிகளிலும் பிற மாநில மக்களின்
மேல் திணிக்கவும் முயல்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து
இருப்பூர்தி நிலைய (Railway
Stations)ப் பெயர்ப்
பலகைகளிலும் இந்தி கோலோச்சுகிறது. அரசுடைமை ஆக்கப்பெற்ற அளகைகளில் (Nationalized Banks) இந்தி
அட்டாணிக்கால் போட்டுக் குந்திக்கொண்டுள்ளது !
ஆட்சி மொழி தொடர்பாக, சிறுபான்மையான இந்தி பேசும் மக்கள்
பெரும்பான்மையாக உள்ள மற்ற மொழி மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு
நாளுக்கு நாள் மிகுதியாகி வருவதால், இந்தியாவின்
ஒருமைப்பாட்டுக்கு இந்தி பேசும் மக்களே ஆப்பு வைத்து வருகிறார்கள் !
”ஆங்கிலம் எனக்கு அந்நிய மொழி என்றால், இந்தியும் எனக்கு அந்நிய மொழியே ! அதை ஆட்சி
மொழியாக ஏற்கமுடியாது ” என்ற உணர்வு இந்தி பேசாத மாநில மக்களிடையே
நாளுக்கு நாள் மிகுதியாகி வருகிறது. தமிழகத்தில்
இந்த உணர்வு மிகவும் தூக்கலாக
இருக்கிறது. ஆட்சி மொழி தொடர்பான
புலனத்தில் (விஷயத்தில்) மையத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தித்
திணிப்பில் மும்முரம் காட்டுவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்திய
ஒற்றுமை இதனால் பாதிக்கப்படும் என்ற அறிவுணர்வு
அவர்களிடம் இருப்பதில்லை !
இந்தி மொழி தெரியாததால், பிற மாநிலங்களில் தமிழர்கள் வேலை வாய்ப்பைப்
பெற முடிவதில்லை என்பது தவறான கூற்று. வேலை வாய்ப்பை நாடி பிற மாநிலத்தவர் தான்
தமிழ் நாட்டுக்குப் படையெடுக்கிறார்கள். பிற மாநிலங்களில் வேலை வாய்ப்பு இருந்தால்
அல்லவா தமிழர்கள் அங்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் !
இந்தி தெரியாததால் பிற மாநிலங்களுக்குச்
செல்லும் தமிழர்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இன்னற்பட
வேண்டியிருக்கிறது என்பதும் தவறான கூற்று. சப்பானுக்குச் சுற்றுலா நிமித்தமாகவோ
பணி நிமித்தமாகவோ செல்லும் எந்த இந்தியன் சப்பான் மொழியைக் கற்றுக் கொண்டு
செல்கிறான் ? செருமனி, பிரான்சு, சீனா, உருசியா, பிரேசில் போன்ற நாடுகளுக்குச் செல்லும் எந்த
இந்தியன் அந் நாட்டு மொழியைக் கற்றுக் கொண்டு செல்கிறான் ?
வெளி நாடுகளில் தூதுவராக அமர்த்தப் படுவோர்
அந் நாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்ட பின்பு தான் அவ்வாறு அமர்த்தப்படுகிறார்களா ? இல்லையே ! எனவே இந்திக்கு ஆதரவாக எழுப்பப்படும்
அத்துணை வாதங்களும் சொத்தை வாதங்களேயன்றி அறிவார்ந்த வாதங்கள் அல்ல !
எண்ணிக்கையில் 1700 –க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிகள் பேசும் மக்களை இந்திக்காரர்கள் அடிமைப்படுத்த நினைப்பது தவறு.
தமிழின் தொன்மையும், வலிமையும், செழுமையும் இந்திக்குத் துப்புரவாகக் கிடையாது. செம்மொழி
நிலையை அடையாத இந்தி, செம்மொழி நிலையை அடைந்த தமிழை அழித்தொழிக்க
நினைக்கிறது !
அடக்கியாள நினைப்பவர்கள் நெடுங்காலம்
வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. இந்தி
ஆதரவாளர்கள் இதை உணராவிட்டால், இந்தியா
சிதறுண்டு போவதை அவர்களால் தடுக்க முடியாது !
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 11]
{25-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக